செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-29
மீனின் வயிற்றில் மனிதனைப்பாதுகாத்த அல்லா எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.
அல்லாஹ் யூனுஸ் நபியை கண்டித்த விதம் பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதாவது யூனுஸ் நபியை ஒரு மீன் விழுங்கியதாகவும் பின்னர் அவர் திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரியதால் அவரை விட்டுவிட்டதாகவும் அல்லாஹ் கூறுகிறான். இதில் செங்கொடி பின்வருமாறு கேள்வி எழுப்புகிறார்.
மீனின் வயிற்றுக்குள் சென்ற ஒருவர் எப்படி உயிருடன் வெளியில் வந்தார்? அதுவும் மீனின் வயிற்றுக்குள்ளிருந்து நடந்தவைகளை அசைபோட்டு சிந்தித்து அல்லாவை வேண்டித் தொழுது பின்னர் வெளியேற முடிந்திருக்கிறது என்றால்... சிறு குழந்தைகள் கூட கேட்டால் சிரித்து விடக்கூடிய தன்மையில் இருக்கும் இந்தக் கதையை தங்கள் வேதத்தில் வைத்திருப்பவர்கள் தான் தங்கள் மதம் அறிவியல் மதம் என்றும் நாளை கண்டுபிடிக்கப்படவிருக்கும் அறிவியல் உண்மைகள் கூட தங்கள் வேதத்தை மீறி இருக்க முடியாது என்றும் அளந்து விடுகிறார்கள்.
அல்லாஹ்வை ஏதோ ஒஅர் அற்பனைப்போன்று நினைத்துக்கொண்டுதான் இக்கேள்வியைக்கேட்கிறார். அவன் அனைத்துக்கும் சக்தியுள்ளவன் என்பதை மறுக்கும் விதமாக கேட்கிறார். நாம் மீண்டும் சொல்கிறோம், அல்லாஹ் இருக்கிறான். அவனுக்கு எதுவும் சிரமமல்ல! தான் நாடியதைச் செய்பவன் என்பது எமது நிலை. இதுபோன்ற சம்பவங்களை மறுக்க வேண்டுமெனில் அல்லாஹ் இல்லை என்பதை இவர் நிரூபித்தாக வேண்டும்! இதுவரை அவர் நிரூபிக்கவில்லை. அப்படியிருக்கும்போது இப்படி கேட்பது இவரது இயலாமையை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. இந்த சம்பவம் இருப்பதால் அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய வசனங்கள் இருப்பதென்பது தவறாம். என்ன மறுப்பு பாருங்கள். அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய வசனங்களுக்கு மாற்று விளக்கம் கொடுக்க முடியாமல் முழித்துக்கொண்டும் அதை மறுக்க முடியாமல் உளறிக்கொட்டிக்கொண்டும் இருப்பவர் எப்படி மறுக்கிறார் என்று பாருங்கள்! இந்த சம்பவம் இருப்பதால் அறிவியல் முன்னறிவிப்புகள் உள்ள வசனங்கள் தவறாகிவிடுமா? என்ன எழுதுகிறோம் என்பதை சிந்தித்துதான் எழுதுகிறாரா?
இந்த சம்பவத்தை கூறும் வசனத்தில் மீன் என்று மொழிபெயர்க்கும் இடத்தில் 'ஹூத்' எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சொல் திமிங்கிலத்தை குறிக்கும் சொல். நீலத்திமிங்கிலங்கள் பிரம்மாண்டமான உடலமைப்பைக்கொண்டவை. அவை ஒரே தடவையில் 50 பேரை நாக்கில் வைத்திருக்கும் அளவுக்கு விசாலமானவை. 50 பேரை வைத்திருக்க முடியும் எனும் போது ஒரு நபரை அதனுள் வைக்க படைத்த இறைவனுக்கு முடியாதா? அவன் நம்மைப்போன்றவனா? எமது நம்பிக்கைக்குள் இருந்து விமர்சிக்காமல் வெளியே போய் விமர்சித்து தன அதிமேதாவித்தனத்தை அடிக்கடி நிரூபித்துக்கொண்டிருக்கிறார் செங்கொடி. எப்படி விமர்சிப்பது எனும் அறிவு கூட இவருக்கில்லை.
ஒவ்வொரு உயிரினமும் உட்கொள்ளும் உணவை செரிப்பதற்காக பல்வேறு அமிலங்களை தங்கள் செரிமான உறுப்புகளில் சுரக்கின்றன. வெளிப்புற தோள்களில் பட்டால் அரித்துவிடக்கூடிய அளவில் நொதித் தன்மையுடன் இருக்கின்றன. ஆனால் ஒரு மீனின் வயிற்றில் ஒரு மனிதன் சில நாட்கள் வசதியாக வாழ்ந்துவிட்டு வெளியில் வந்ததாக கதை சொல்கிறது குரான்.
இவரது உளறலுக்கு ஒரு அளவே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று! இந்த சம்பவத்தை விமர்சிப்பவர் அதன் பின்னுள்ள வசனங்களில் உள்ளதைக்குரிப்பிட்டாரா? அப்படி குறிப்பிடாவிட்டாலும் இதை அவர் விளக்கிக்கூறும் போதாவது குறிப்பிட்டாரா? இல்லை! யூனுஸ் நபி மீன் வயிற்றில் வசதியாக வாழ்ந்தார் என்பது அப்பட்டமான பொய்!
அவற்றை நோயுற்றவராக வெட்டவெளியில் எறிந்தோம்.(37:145)
அவர் நோயுற்றவராக வெளியே எறியப்பட்டுள்ளார் என்றால் அவர் மீனின் வயிற்றினுள் சொகுசாக வாழ்ந்தார் என்று எப்படி புரிந்து கொள்வது? இவரது உளறலுக்கும் கயமைத்தனத்திற்கும் ஒரு அளவில்லை எனும் அளவிற்கு இவரது தொடர் முழுவதும் கொட்டிக்கானப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்தினுள்ளும் செறிவுள்ள அசிட்களும் தாக்கத்தை ஏற்படுத்தும் நொதியங்களும் உள்ளதுதான்! ஆனால் இந்த மீனினுள்ளும் அப்படி உள்ளதா? என்பதையும் சேர்த்து விளக்க வேண்டும். அப்படி இருந்தாலும் இந்த வசனம் தவறாகாது! அவர் நோயுற்றவராகத்தான் வெளியே எறியப்பட்டுள்ளார் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்து ஒரு சமுதாயத்தை குரங்குகளாக மாற்றிய சம்பவத்தையும் செங்கொடி விமர்சிக்கிறார். இந்த சம்பவம் இரண்டும் விமர்சனத்திற்கு உரிய விடயமே இல்லை! இதை விமர்சிக்க வேண்டுமெனில் அல்லாஹ் இல்லை என்று வாதிட வேண்டும்! அல்லது உலக விடயங்களில் குர்ஆன் தவறாக கூறியுள்ளது என்றாவது வாதிட வேண்டும்! எதையும் செய்யாமல் இவற்றை விமர்சிப்பது கையாளாகத்தனம்!
குரங்குகளின் மூதாதை விலங்கு ஒன்றிலிருந்து படிப்படியாக பல லட்சம் ஆண்டுகளில் உருமாறி வந்தவன்தான் மனிதன் என பரிணாமம் கூறினால் அதற்கு எதிராக ஆயிரம் கேள்விகளை எழுப்பும் மதவாதிகள், இங்கே ஒரே நொடியில் மனிதனை குரங்காக மாற்றிய குரங்காக மாற்றிய இந்த கதைக்கு எதிராக ஒற்றை ஒரு கேள்வியையேனும் எழுப்ப முன்வருவார்களா?
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது குருட்டுவாதம்! அதை நாம் ஏற்கமாட்டோம்! ஆனால் இது அல்லாஹ் செய்வது. அவனுக்கு இது சிரமமல்ல என்பதுதான் எமது வாதம்! இதற்கெதிராக நாம் எந்த கேள்வியும் கேட்க வேண்டிய அவசியமில்லை! ஏன்? அவன் சர்வ சக்தன் என்று நாம் நம்புகிறோம்! அவ்வாறில்லை என்று நிரூபித்துவிட்டு வாதிட வேண்டும்.
ஒரு விலங்கைவிட அறிவிலும், செயலிலும், நினைவிலும், பரிமாற்றத்திலும், கருவிகளை பயன்படுத்துவதிலும் மேம்பாடு கொண்டவன் மனிதன். ஆனால் மனிதனின் இந்த மேம்பாடுகளை எல்லாம் ஒரு அளிப்பான் கொண்டு அளித்து விடுவதைப்போல் குரங்காக மாறிவிட்டார்கள் என கதை சொல்கிறது குரான்.
மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று நம்புகிறார்கள்! எப்படி என்று கேட்டால் அது இயற்கை என்கிறார்கள்! இயற்கைக்கு ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்ற முடியும் என்று நம்புபவர்கள் அனைத்து ஆற்றலுள்ளவன் மனிதனை குரங்காக மாற்றினான் என்றால் ஆச்சரியப்படுகிறார்கள்! இவர்கள் ஒரு நிலையற்றவர்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.
இந்த தொடர் முழுக்க முழுக்க எமது நம்பிக்கைக்குள்ளிருந்து விமர்சிக்காமல் வேறொரு கோணத்தில்தான் விமர்சிக்கப்பட்டுள்ளது! அதைக்கூட உருப்படியாக செய்யவில்லை!. அல்லாஹ் இல்லை என்பவர்களுக்கு இது கதைதான்! அல்லாஹ் இருக்கிறான்! அவன் அனைத்துக்கும் ஆற்றலுள்ளவன் என்பவர்களுக்கு இது உண்மைச்சம்பவம்! அல்லாஹ் இல்லை என்று நிரூபித்துவிட்டால் இதை நாங்கள் ஒதுக்குவதற்கு தயார்! செங்கொடி தயாரா?
வளரும் இன்ஷா அல்லாஹ்